
சென்னை,
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தற்போது திருவள்ளுவரின் வாழ்க்கையை 'திருக்குறள்' என்ற திரைப்படமாக தயாரித்துள்ளது. ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைத்துள்ளார்.
பட விழாவில் இயக்குனர் பாலகிருஷ்ணன் பேசும்போது, ''ஒரு மோசமான திரைக்கதையை கொண்டு, நல்ல படம் எடுக்க முடியாது. ஒரு நல்ல திரைக்கதையே படத்துக்கு ஆணிவேர். அதில் சமரசம் செய்துகொள்ளவே கூடாது. 'காமராஜ்' படத்தை தொடர்ந்து, திருவள்ளுவர் வாழ்க்கையை படமாக எடுங்கள் என்று என்னிடம் பலரும் சொன்னார்கள். திருக்குறளில் உள்ள 1,330 பாடல்களை எப்படி படமாக எடுக்கமுடியும்? என்று யோசித்தபோது, எங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது கருணாநிதியின் 'குரலோவியம்'.
இந்த படத்துக்கான பணம், அதன் போக்கிலேயே எங்களிடம் வந்து சேர்ந்தது. வாழ்க்கையில் பல விஷயங்கள் அதன் போக்கில் தான் நிகழும். கடும் சவால்களுக்கிடையே படத்தை எடுத்து முடித்தோம். நான் லாபத்துக்கு படம் எடுக்கும் ஆள் இல்லை. என்னை பொறுத்தவரை ஒரு நல்ல விஷயம் மக்களிடம் சென்று சேரவேண்டும். அதுதான் என் இலக்கு'', என்றார்.