விழுப்புரம், பிப். 11: கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி விடுதியில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் நீதி விசாரணை கேட்டும், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை வீடியோவாக வழங்கக்கோரியும் அவரது பெற்றோர், உறவினர்கள் விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் சீனிவாசா நகரை சேர்ந்த வித்யா மகள் கோவ (14). இவர், கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9ம் வகுப்புபடித்து வந்தார். கடந்த 7ம் தேதி இவர் உடல்நிலை பாதித்து விடுதியில் இருந்த நிலையில் அங்குள்ள கழிவறை பகுதியில் தூக்கு போட்டு இறந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த நெல்லிக்குப்பம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கோவயின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் தாட்கோ அலுவலகம் முன் நேற்று இறந்த கோவயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டனர். தனது மகளை பள்ளி நிர்வாகத்தினர் தான் கொலை செய்து விட்டதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வீடியோ மூலம் காட்ட வேண்டும். அதன் மூலம் உடலில் காயங்கள் உள்ளதா என்பதை நாங்கள் அறிந்து கொள்வோம். மாணவியின் இறப்புக்கு உண்மையான நீதி விசாரணை செய்து, காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவி சம்பந்தமான வழக்கு, நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணையில் உள்ளதாகவும், அவர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுப்பார்கள் என கூறியதன் பேரில், போராடிய மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post கடலூர் தனியார் பள்ளி விடுதியில் மாணவி சடலம் மீட்பு: விழுப்புரத்தில் நீதி கேட்டு பெற்றோர் போராட்டம் appeared first on Dinakaran.