![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/24/35548837-untitled-2-1.webp)
அகர்தலா,
திரிபுரா மாநிலம் செபாஹிஜாலா மாவட்டத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பெண் ஒருவரை சில பெண்கள் இணைந்து தாக்கி, அவரது தலையை பாதி மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லால்சிங்முரா பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கணவர் உள்ளூர் சுய உதவிக்குழுவிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை. இந்த நிலையில் அந்த பெண் சமையலறையில் இருந்தபோது, அவரது வீட்டுக்கு வந்த சுய உதவிக்குழுவைச் சேர்ந்த சில பெண்கள், அந்த பெண்ணிடம் கடன் தொகையை உடனடியாக திருப்பி செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அந்த பெண்ணை வீட்டிலிருந்து வெளியே இழுத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் தலையை பாதி மொட்டையடித்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மகளிர் போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.