மதுரை, மே 7: உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்படுவதாக மதுரை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, கடந்த 2022ம் ஆண்டு வலையபட்டி பகுதியில் மறைந்திருந்து கண்காணித்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் அப்பகுதியில் சுற்றிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் 52 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா கடத்தியதாக உசிலம்பட்டியை சேர்ந்த சின்னராஜா (33), தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (31) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதன்மை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் தங்கேஷ்வரன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பளித்தார். இதில் கஞ்சா கடத்தியது உறுதியானதால் சின்னராஜா, ராஜேந்திரபிரசாத் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
The post கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.