*அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தல்
திருமலை : கங்கை அம்மன் கோயில் திருவிழாவில பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தினார்.
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற கிராம தேவதையான தாத்தைய்ய குண்டா கங்கை அம்மன் கோயில் திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையர் மவுரியா, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் எந்தவித இடர்பாடுகளையும் சிரமத்தையும் சந்திக்காத வகையில், அம்மனை தரிசிக்கும் பாதையை குறிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்கல்களைத் தவிர்க்க அனைத்து வழித்தடங்களிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பொங்கல் வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு குடிநீர் வழங்க பல்வேறு இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்பட வேண்டும்.
பக்தர்கள் திருவிழாவின் போது ஒருங்கிணைந்து செயல்படவும், முதியவர்கள் மற்றும் குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி வரும்போது, தரிசனத்திற்குச் செல்லும் வழியில் எந்த சிரமங்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அப்போது துணை மேயர் முனிகிருஷ்ணா, நாயி பிராமணர் சங்க மாநில தலைவர் திரகோட்டி சதாசிவம், டிஎஸ்பி பக்தவத்சலம், கண்காணிப்பு பொறியாளர்கள் ஷியாம்சுந்தர், கிருஷ்ணா ரெட்டி, இ.இ.க்கள் துளசிகுமார், ரவீந்திரன், கோயில் இ.ஓ. ஜெயக்குமார், டிசிபி மகாபத்ரா, சுகாதார அலுவலர் டாக்டர் யுவா அன்வேஷ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் செஞ்சய்யா, சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post கங்கை அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.