ஓரிக்கை பகுதியில் டூவீலர் திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது: போலீசார் நடவடிக்கை

2 months ago 10

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை, திருவள்ளுவர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் திவ்யா மகன் கிருஷ் (17). இவரின் நண்பர் பிரவீன்குமார் (17). இவர்கள் 2 பேரும் ஓரிக்கையில் உள்ள ஒரு டிபன் கடையில் கடந்த 2ம் தேதி இரவு டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு டூவீலரில் வந்த ஓரிக்கை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் முருகானந்தம் (24), செவிலிமேடு அவ்வையார் நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிபாரதி (23) ஆகிய 2 பேர் மற்றும் 1 நபர் கிருஷ் மற்றும் பிரவீண்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி, கைகளால் தாக்கி அவர்களிடமிருந்த 1 ஐபோன் மற்றும் 1 ஆண்ட்ராய்டு போனை பறித்துச்சென்றுள்ளனர்.

இதேபோன்று, ஓரிக்கை கோல்டன் நகரில் டீக்கடை வைத்திருக்கும் வினோத் (25) என்பவர் பேருந்து பணிமனை அருகில் டூவீலரில் முருகானந்தம், மணிபாரதி ஆகியோர் வினோத்தை வழிமடக்கி கத்தியைக் காட்டி அவரிடமிருந்த 2100 ரூபாயை பறித்துக்கொண்டு டூவீலரையும் பறித்துச் சென்றுள்ளனர். இந்த, 2 சம்பவங்கள் குறித்தும் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் முருகானந்தம், மணிபாரதி ஆகிய 2 பேரையும் கைது செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை மற்றொரு குற்றவாளியான காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு அம்பேத்கர் நகரில் பதுங்கியிருந்த சதீஸ்குமார் மகன் பூச்சி (எ) ஜனாகுமாரை (20) காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து 2100 ரூபாய் மற்றும் 1 ஐபோன், 1 ஆண்ட்ராய்டு போன், டூவீலர் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

The post ஓரிக்கை பகுதியில் டூவீலர் திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article