கூடுவாஞ்சேரி: ஓட்டேரி அரசு மேல்நிலை பள்ளி ஆண்டு விழாவின்போது, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரிசுகளை வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஓட்டேரி விரிவு பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இதில், 775 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்தியநாராயணன், துணை தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் கலந்துகொண்டு ஓட்டப்பந்தயம், கபடி, வாலிபால், டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்று, பதக்கம், கேடயம் ஆகியவற்றை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில், வார்டு உறுப்பினர் சர்மிளா சரவணன், பெற்றோர்-ஆசிரியர் கழக துணை தலைவர் ரபீக், துணை செயலாளர் வனஜா, கிராம நலச்சங்க தலைவர் பூபாலன், திமுக கிளை செயலாளர் பாலு உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post ஓட்டேரி அரசு பள்ளி ஆண்டு விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு appeared first on Dinakaran.