ஓசூர்: ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாய தோட்டங் களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆலியாளம் கிராமத்தில் 5 காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்கள் மற்றும் காய்கறிகளை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இந்த காட்டு யானைகள் சானமாவு காட்டுப் பகுதியை ஒட்டி உள்ள விவசாயத் தோட்டங்களில் இரவு நேரங்களில் புகுந்து கேரட், முட்டைகோஸ், கொத்தமல்லி, புதினா தோட்டங்கள் மற்றும் ராகி உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டும் காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.
இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை யடைந்தனர். இந்த 5 காட்டு யானைகளை சானமாவு காட்டுக்கு விரட்டும் நடவடிக்கையில் ஓசூர் வனத்துறையினர் ஈடுபட்டனர். தற்போது இந்த காட்டு யானைகள் ஆழியாளம் அருகேயுள்ள சானமாவு காட்டுப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இவை இரவு நேரங்களில் மீண்டும் கிராமத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணி நடந்து வருகிறது.
The post ஓசூர் அருகே 5 யானைகள் முகாம்; விவசாய பயிர்கள் சேதம்: தோட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை appeared first on Dinakaran.