ஒருநாள் கிரிக்கெட்: பேட்டிங்கில் மட்டுமல்ல.. பீல்டிங்கிலும் மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி

3 hours ago 2

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய 5-வது லீக்கில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாத் ஷகீல் 62 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். மேலும் இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

அத்துடன் நேற்றைய ஆட்டத்தில் பீல்டிங்கிலும் மாபெரும் சாதனை படைத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் விராட் 2 கேட்சுகள் பிடித்தார். அதனையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பிடித்த கேட்சுகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. விராட் கோலி - 158

2.முகமது அசாருதீன் - 156

3. சச்சின் - 140

4.டிராவிட் - 124

5. ரெய்னா - 102 

Read Entire Article