ஒரு மொழியை வளர்க்க மற்ற மொழிகளை அழிக்க முற்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது - சீமான்

5 hours ago 1

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் முதல் இரு ஆட்சியாண்டுகளான 2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து நிதியாண்டுகள் காலத்தில் சமஸ்கிருத மொழியைப் பரப்ப ரூ.2,532.59 கோடியும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து வெறும் ரூ.147.56 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குறிப்பாக தமிழுக்கு ஓர் ஆண்டிற்கு சராசரியாக வெறும் 13 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது என்பது தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.

இன்று நேற்றல்ல பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது முதலே இத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து வருவதும், அதற்கு தொடர்ச்சியாக தமிழ்நாடு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்வதும் வழமையானது என்றாலும் மோடி அரசு அதனைப் பொருட்படுத்துவதே இல்லை என்பதுதான் பெருங்கொடுமையாகும்.

பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியை வாழ்விக்க முயல்வதன் மூலம், இந்தியாவை இந்து நாடாகக் கட்டமைக்கவும், உலகமயமாக்கலின் மூலம் வணிகச்சந்தையாக மாற்றி நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய ஒன்றியத்தில் அவ்வணிகம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பொதுமொழியை உருவாக்கவுமே இவ்வகை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவையாவும் இந்துத்துவாவுக்குக் கிளைபரப்பவும், இந்தியாவைக் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமேயான நாடாக மாற்றவும் உதவுமே ஒழிய, இந்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் துளியளவும் நன்மை பயக்காது.

பத்தாயிரம் மக்கள் கூட பேசாத ஒரு மொழியை வளர்த்து மற்ற தேசிய இனங்களின் தாய்மொழியை அழிப்பதை எப்படி ஏற்பது? இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட பல தேசிய இனங்கள் இணைந்து வாழக்கூடிய ஒன்றியம் என்பதை இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் அதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. மக்கள் சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு போகிறார்கள் என்பதற்காக ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்று ஒவ்வொன்றாக ஒற்றைமயப்படுத்தி திணிக்கின்ற கொடுங்கோன்மை நீண்டகாலம் நிலைக்கப்போவதில்லை. வடமொழி சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதியை அள்ளிக்கொடுக்கும் இந்திய அரசு, 50,000 ஆண்டுகளுக்கு மூத்த தமிழ்மொழிக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் அளிப்பதில்லையே ஏன்? அதிகளவில் வரி பங்களிப்பு செய்யும் தமிழ்நாட்டிற்கு இந்திய மத்திய அரசு தரும் தண்டணை இதுவா?

இந்திய மொழிகளின் தொன்மையைத் தமிழிலிருந்து அறியலாம் என்று பிரதமர் மோடியே கூறுகிறார். உலகின் மூத்த மொழியான தமிழ் இந்தியாவில் இருப்பது எங்களுக்குப் பெருமை என்கிறார். ஆனால் இதுவரை இந்திய அரசு எதுவொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை தந்து அங்கீகாரம் அளித்துள்ளது? இது உதட்டில் தேன் தடவி, உணவில் விஷம் தரும் கொடுஞ்செயலாகும்.

அரசியலமைப்பு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கச்சொல்லி சுப்ரீம் கோர்ட்டே அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கு முற்றிலும் நேரெதிராக ஒற்றை மொழியை முன்னிறுத்தி, அதனைத் திணிக்க முற்படும் மத்திய அரசின் செயல் மிகப்பெரும் ஜனநாயகப் படுகொலையாகும். இந்த நாட்டில் பிரிவினைவாதிகள் என்று யாரும் தனியாக இல்லை. உண்மையில் ஒரு மொழியைத் திணிப்பது, ஒரு மொழியை வளர்ப்பதன் மூலம் நாட்டைத் துண்டாட நினைக்கும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள்தான் உண்மையான பிரிவினைவாதிகள். பல இனங்கள், பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும் என்ற வரலாற்றுப் பேருண்மையை எப்போது உணரப்போகிறார்கள்?

ஆகவே, பலதரப்பட்ட மொழிகள் பேசப்படும் இந்நாட்டின் பன்மைத்துவத்தைச் சிதைத்து, ஒரு மொழியை வளர்க்க, மற்ற மொழிகளை அழிக்க முற்படுவது இந்நாடு ஏற்றிருக்கிற கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்து, இனியேனும் அனைத்து செம்மொழிகளுக்கும் சம அளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், தமிழ்மொழிக்கு கடந்த நிதியாண்டுகளில் குறைத்து வழங்கப்பட்ட நிதியையும் சேர்த்து ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article