நன்றி குங்குமம் தோழி
உன்னத உறவுகள்
சிறு குடும்பம் என்றால், ரத்த பந்த உறவுகள் பெயரில் ஐம்பது பேராவது இருப்பார்கள். இவர்கள் அப்பா அல்லது அம்மா வழியில் வந்த சந்ததிகளாக இருப்பார்கள். குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு இவர்கள் உரிமையோடு கலந்து கொள்வார்கள். ஒன்று விட்ட உறவுகள் விபரங்கள் அறிந்தவுடன் அனைத்தையும் சிறப்பிக்கச் செய்வார்கள். பணம், சொத்து காரணங்களுக்காக பல்வேறு குடும்பங்களில் தகராறுகள் ஏற்படும். ஆனால் உறவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் படிப்பறிவு மற்றும் சட்டங்கள் காரணமாக இந்த விஷயங்கள் குறைந்து வருகின்றன.
ஆனால் காலத்தின் கட்டாயம், வேலை பளுவினால் மன அழுத்தம் எல்லோருக்கும் பொதுவாக காணப்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மனசங்கடங்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. மன அழுத்தம் ஏற்படும் பொழுது நம் பாசமும் பந்தமும் பாதிக்கப்படுகிறது. சொந்த உறவுகள் கூட நம்மிடமிருந்து தூரத்திலிருப்பது போல் உணர்கிறோம். சொந்தங்கள் நமக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை, நல்லெண்ணத்தோடு பார்வை கொண்டால், எதுவுமே குறையாக தெரியாது. பணத்தையும் வசதியையும் காட்டி அன்பையோ, பாசத்தையோ நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாது.
வீட்டில் ஒருவருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், வீட்டில் இருக்கும் பாட்டியோ, சொந்த உறவினரோ முதலில் கை வைத்தியம் செய்து முதலுதவி செய்து விடுவார்கள். அதற்குப் பிறகு மருத்துவமனைக்கு சென்று நாம் மேற்ெகாண்ட சிகிச்சையை எடுத்துவிடலாம். நம் உறவுகளின் பாசபந்தம் என்பது நம்மைக் கட்டிக் காத்து, அன்புக்கு அடிமைப்படுத்தும். சில உறவுகள் பலகீனமாக இருந்தாலும், குறை சொல்லிவிட முடியாது. நாம் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்துதான் நம்மைச் சுற்றி பாச வலைகள் பின்னப்படும்.
ஒரு குடும்பத்தில் ஒரே பெண். தாய், தந்தையர்கள் காலமாகி விட்டனர். அவளின் பெரியப்பா மகன்தான் துணையாக இருந்தான். அவனுடைய பிள்ளைகளும் அவளை சொந்த அத்தையாக பாசத்தைப் பொழிந்தனர். அண்ணன் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் தங்கையின் ஆலோசனைகள் அங்கு முதன்மையாக கவனிக்கப்படும். ஊரே அவர்களை சொந்த அண்ணன்-தங்கையாகவே பார்த்தது. திடீரென தங்கையின் கணவனுக்கு வேலையில்லாமல் போனது. கையில் இருந்த சேமிப்புகள் கரைந்தது. அண்ணனுக்கு விஷயம் தெரியவர தன் மனைவி பெயரில் இருக்கும் வீட்டில் தங்கையை தங்க வைத்தான். அண்ணியும், வீட்டை பூட்டி வைக்காமல், வாழும் வீடாக இருப்பதால், அவர்களே இருக்கட்டும் என்று கூறிவிட்டார்.
உறவுகள் செய்யும் மாயம். ஒன்றுவிட்ட பிறப்புகள் என்றாலும் சில சமயம் உடன் பிறப்புகளின் பாசத்தையே மிஞ்சி விடுவார்கள். குறிப்பாக ஒத்தைப் பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களில் ஒன்றுவிட்ட உறவுகள் நெருக்கம் அதிகமாகவே காணப்படும். ஒரு பெற்றோர் தன் மகனுக்கு காதல் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு ஏற்பாடுகள் செய்தனர். உடன் பிறப்புகள் முதல் நெருங்கிய உறவினர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.
பையனின் தாய் வேலையில் இருந்ததால் சக தோழிகள் உதவ முன் வந்தார்கள். தாயின் அண்ணியும் அவர்கள் குடும்பத்தாரும் எந்த உதவியும் செய்யத் தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். பையனின் பெற்றோரின் பெருந்தன்மையை பாராட்டி, திருமணம் நன்கு நடைபெற்றால் போதும் என்கிற அளவுக்கு வேலைகளை பகிர்ந்து கொண்டு செய்தார்கள். திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. நெருங்கிய உறவுகளிடம் காணப்படாத ஒத்துழைப்பு ஒன்று விட்ட உறவினர்கள், அவர்கள் குடும்பத்தினர் என அனைவரிடம் காணப்பட்டது.
2016, 2017ம் ஆண்டுகளில் எதிர்பாராத இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. முதல் மாடியில் வசித்தவர்கள் கூட, உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். அன்பு செலுத்தி, பாசம் காட்டுவதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அந்த அளவுக்கு சில விஷயங்கள் அவர்களுக்குப் பிடிக்காமல் போனால், குறை சொல்வதும் உண்டு. சில கோப தாபங்களால் எதுவுமே நடந்து விடாது. உறவு முறைகளும் மாறிவிடாது. பிறக்கும் போதே அவர்தான் அம்மா, அப்பா என்று தெரிந்து கொள்வது போல, உறவுகளும் அப்பொழுதே அமைந்து விடுகின்றன. சில குடும்பங்களில் பெரியவர்கள் இன்று இல்லாமல் இருக்கலாம். உறவினர்கள் வேறு இடங்களில் கூட இருக்கலாம். ஆனால் நெருக்கமும் பந்த-பாசமும் குறையாமல் இருக்கும்.
முந்தைய காலக்கட்டத்தில் வீட்டு மாப்பிள்ளை எதிரே பெண்ணின் அம்மா உட்கார மாட்டார்கள். மாமியார்கள் மாப்பிள்ளையிடம் மறைந்து நின்றுதான் பேசுவார்கள். மாப்பிள்ளை வயதில் குறைந்தவராக இருந்தாலும், அவரை ‘வாங்க’, ‘போங்க’ என்று மரியாதையுடன் தான் அழைத்தார்கள். இன்று மாப்பிள்ளைகள் மாமியார்-மாமனாரையும் தாய்-தந்தை அல்லது அத்தை-மாமா உறவு வைத்துக் கூப்பிடுகிறார்கள். மாப்பிள்ளையை தங்கள் மகன் போல நடத்துகிறார்கள். பெயர் சொல்லி சமமாகக் கூப்பிட்டு பழகும் அளவுக்கு காலக்கட்டம் முன்னேறியுள்ளது. அதே போல் மைத்துனன், மச்சினி உறவும் நட்பாகக் காணப்படவில்லை. மரியாதை கலந்த உறவுமுறைதான் இருந்தது. இன்று எல்லாம் மாறிவிட்டது.
பெற்றோர் இல்லாத குடும்பங்களில், மாப்பிள்ளையே மச்சினியை தங்கையாக பாவித்து அப்பா இடத்தில் இருந்து படிக்க வைப்பது முதல் திருமணம் வரை நடத்தித் தருகிறார்கள். இவையெல்லாம் அன்பானப் புரிதலைத்தான் தருகிறது. பெண்களும் கணவனின் தம்பியை தன் தம்பியாக பாவித்து பரந்த மனப்பான்மையோடு அனுசரித்துச் செல்வதும் நடக்கிறது. கல்வி அனைவரும் பெற்றுவிட்ட பின் குடும்பச் சூழலிலும் அது பரந்த மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளது. மாமியாரும் மருமகளும் தோழிகள் ேபான்று சில இடங்களில் உள்ளனர்.
உடை அணிவது முதல் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. ஒரு வீட்டில் மாமியார் சல்வார் போட்டுக் கொண்டு ஆடம்பரமாக அலங்காரம் செய்து கொள்கிறார். மருமகள் புடவை மட்டுமே உடுத்துகிறார். கேட்டால் ‘நான் இப்படித்தான் வளர்ந்தேன்’ என்று பெருமை கொள்கிறார். உடை அணிவதோ, அலங்காரம் செய்து கொள்வதோ அவரவர் தனிப்பட்ட விஷயம். காலமாற்றத்திற்கு ஏற்றவாறு நாம் அனைவருமே மாறிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அன்பு, பாசத்தினை பெற உறவுகள் தேவை.
ஊடகங்கள் இல்லாத காலக்கட்டத்தில் உறவுகள் மிகவும் நெருக்கமாகவும், அக்கறையுடனும் காணப்பட்டது. விழாக்காலங்கள் வந்தால், வாழ்த்துகள் தபாலில் வந்து குமியும். பண்டிகை நாட்களில் உறவினர் வீட்டிற்குச் செல்வதும், பெரியவரை சந்தித்து ஆசி பெறுவதும் வழக்கமாக இருந்தது. ஒன்றுவிட்ட உறவு, இரண்டாவது பரம்பரை சந்ததிகள் என்று வேற்றுமை பார்க்க மாட்டார்கள். பிள்ளைகளுக்கு வீடே சந்தோஷமான விளையாட்டு மைதானமாக இருந்தது. சமூக ஊடகங்கள் வந்து விட்ட பிறகு நெருங்கியவர்களிடம் கூட தொலைபேசி உறவுதான்.
அதுவும் அவரவர் விருப்பப்படி ஓய்வு சமயங்களில் மட்டுமே பேச முடியும். அனைத்தும் விலை கொடுத்து வாங்கி விடுகிறோம். தாத்தா-பாட்டி, அப்பா-அம்மா, அத்தை-மாமா, பெரியப்பா-சித்தப்பா போன்ற உறவுகளை கொடுத்து வாங்க முடியுமா? பிள்ளைகளிடம் உறவுகள் பற்றி நிறைய பேசி புரிய வைப்போம். உறவுகள் உன்னதமானவை.
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்
The post ஒன்றுவிட்ட உறவும் நெருக்கம் காட்டும்! appeared first on Dinakaran.