அம்பத்தூர்: ஒன்றிய அரசுக்கு லாலிபாடுபவர்களின் கேள்விகளுக்கு பதில்கூறும் நிலையில் நாங்கள் இல்லை என அத்திப்பட்டு பகுதியில் நடந்த அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கிவைத்து, அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அம்பத்தூர் அத்திப்பட்டு ஐசிஎப் காலனியில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், அன்னம் தரும் அமுத கரங்கள் திட்டத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுகவினருக்கு நற்சான்றிதழைதான் அளித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, ஒன்றிய அரசுக்கு லாலி பாடுவது, பாரதிய ஜனதாவிடம் கட்சியை முழுமையாக அடமானம் வைத்திருக்கின்ற ஜெயக்குமார் போன்ற அதிமுகவினருக்கு சுயமரியாதை என்பது அறவே பிடிக்காத ஒன்று. இதுபோன்ற லாலி பாடுபவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறும் நிலைமையில் நாங்கள் இல்லை. ஒன்றிய அரசுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கின்ற எங்களுடைய நடவடிக்கையை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர் டி.எஸ்.பி.ராஜகோபால், எம்.டி.ஆர்.நாகராஜ், 86வது வார்டு கவுன்சிலர் கமல், மருத்துவர் சாந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post ஒன்றிய அரசுக்கு லாலிபாடுபவர்களின் கேள்விகளுக்கு பதில்கூறும் நிலையில் இல்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.