
புவனேஸ்வர்,
ஒடிசாவில் கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ரத்னாகர் சாஹூ என்பவர் வேலையில் இருந்தபோது, அவரை சில மர்ம நபர்கள் அடித்து, கடுமையாக தாக்கி அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து போட்டனர். இதுபற்றிய வீடியோ வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்தில், பா.ஜ.க. பிரமுகரின் முன்னிலையில் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த பிரமுகருக்கு கட்சி எம்.எல்.ஏ.வுடன் தொடர்பு உள்ளது. அந்த அரசு அதிகாரி, பட்டப்பகலில் மக்களின் குறைகளை கேட்டு கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது என்றார்.
இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பிஜூ ஜனதா தள தொண்டர்கள் இன்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்புடைய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.சி.பி. பிரகாஷ் சந்திரா கூறியுள்ளார்.