
தர்மபுரி,
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. மேலும் கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தமிழக எல்லையோர காவிரி ஆற்று பகுதிகளிலும் பெய்த மழையால் கடந்த சில நாட்களாக நீர் வரத்து அதிகரித்தது.
இருப்பினும் தற்போது தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வேகம் குறைந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்து வருவதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக தற்போது குறைந்துள்ளது.