
தர்மபுரி,
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதன்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி நீரும், கபிணி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வந்து கொண்டிருந்த நீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், நேற்று பிற்பகல் முதல் நீர்வரத்து உயரத் தொடங்கியது.
நேற்று மாலை நீர்வரத்து 22 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், தீவிர பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.