புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பல வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர். மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்க இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒரு வாரத்திலேயே மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக மே 25ம் தேதி நடைபெற இருந்த ஐபிஎல் பைனல் போட்டிகள் தற்போது ஜூன் 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சர்வதேச போட்டிகள் தொடங்க உள்ளதால் பல வெளிநாட்டு வீரர்கள் அதற்கான பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இங்கிலாந்தை சேர்ந்த ஜேமி ஓவர்டன் மற்றும் சாம்கரன் ஆகியோர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து வீரர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா, இந்த ஆண்டு மாற்று வீரராக சென்னை அணியில் இணைந்து சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்கா வீரர் டெவால் பிரெவிஸ், ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லீஸ், இலங்கையை சேர்ந்த பதிரனா, ஆப்கானிஸ்தானை சேர்ந்த நூர் அகமது ஆகிய வீரர்கள் சிஎஸ்கே அணியில் இணைய உள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் ஜேமி ஓவர்டன் இடம்பெற்றுள்ளதால் அவரால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. வருகிற 20ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் 25ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக தங்களது கடைசி 2 போட்டிகளில் விளையாட உள்ளது. இதேபோல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நாளை தொடக்கம்: ஜேமி ஓவர்டன், சாம்கரன் விலகல் appeared first on Dinakaran.