
புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரல் 49 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 பந்தில் இரு விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன் எடுத்தது. பின்னர் 12 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 4 பந்தில் 13 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தையும் சேர்த்து ஐ.பி.எல்.-ல் இதுவரை 5 சூப்பர் ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 4 வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் சூப்பர் ஒவரில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற மாபெரும் சாதனையை டெல்லி கேப்பிடல்ஸ் படைத்துள்ளது.
இதற்கு முன்னர் பஞ்சாப் கிங்ஸ் 3 வெற்றிகளை பெற்றிருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முந்தியுள்ள டெல்லி புதிய வரலாறு படைத்துள்ளது.