
முல்லான்பூர்,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.
டெல்லி கேப்பிட்டல்ஸ்,சன்ரைசர்ஸ் ஐதராபாத் , லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 5 முதல் 10 இடங்களை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. தோல்வி காணும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்பினை வெளிப்படுத்தி வருகின்றார். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது கணிப்பின் படி, இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று கூறியுள்ளார்.