
லக்னோ,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைய உள்ளன. அதன்படி லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
17 புள்ளிகளுடன் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 'டாப்-2' இடத்தை உறுதி செய்துவிடும். அது பிளே ஆப் சுற்றில் அந்த அணிக்கு கூடுதல் நன்மையாக அமையும். எனவே அதற்கான பெங்களூரு அணி முழு மூச்சுடன் போராடும்.
மறுபுறம் பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ அணி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிக்கும். இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.