
லக்னோ,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 118 ரன்களும், மிட்செல் மார்ஷ் 67 ரன்களும் அடித்தனர். பெங்களூரு தரப்பில் நுவான் துஷாரா, புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜிதேஷ் ஷர்மா 85 ரன்களும்,விராட் கோலி 54 ரன்களும் அடித்தனர். லக்னோ அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
நடப்பு ஐ.பி.எல். சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் 627 ரன்களுடன் தொடரை நிறைவு செய்துள்ளார்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் லக்னோ அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை கே.எல்.ராகுலிடம் (616 ரன்கள்) தட்டிப்பறித்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. மிட்செல் மார்ஷ் - 627 ரன்கள் (2025)
2. கே.எல்.ராகுல் - 616 ரன்கள் (2022)
3. கே.எல்.ராகுல் - 520 ரன்கள் (2024)
4. நிக்கோலஸ் பூரன் - 524 ரன்கள் (2025)
5. டி காக் - 508 ரன்கள் (2022)