மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்: அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட "உலகளாவிய எச்சரிக்கை"

6 hours ago 2

வாஷிங்டன்,

ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களின் இருத்தலுக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது.

ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் ஏவுகணை திறன்களை கணிசமாக குறைத்து, அதன் அணுசக்தி செறிவூட்டல் வசதிகளை சேதப்படுத்தியது. இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இஸ்ரேலை திக்குமுக்காடச்செய்து வருகிறது.

கடந்த 10 நாட்களாக நடந்து வரும் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பலனளிக்காது எனக்கூறி ஈரான் ஒதுங்கிவிட்டது.

எனினும் ஈரானுக்கு 2 வாரங்கள் கெடு வழங்கி இருப்பதாக அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானுடன் நேரடி போரில் ஈடுபடுவதா? இல்லையா? என 2 வாரங்களில் முடிவு எடுப்பேன் என அறிவித்து இருந்தார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஆர்வம் காட்டாததால், அந்த நாடு மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் நேரடி தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டிருந்தது.

அதன்படியே நேற்று அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் தொடுத்தது. அந்த நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கியது.

அமெரிக்காவின் பி-2 குண்டுவீச்சு விமானங்கள், அவை மட்டுமே எடுத்து செல்ல உருவாக்கப்பட்ட 30 ஆயிரம் பவுண்டு (13,500 கிலோ) எடை கொண்ட 'பங்கர் பஸ்டர்' எனப்படும் பதுங்கு குழி அழிப்பு குண்டுகளை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

போர்டோ அணுசக்தி தளம் மலையை குடைந்து மிகவும் ஆழத்தில் அமைக்கப்பட்டது ஆகும். எனவே அதை அழிக்க 'பங்கர் பஸ்டர்' குண்டு முக்கிய தேவை என கருதப்பட்டது. ஏனெனில் இந்த குண்டுகள் மண்ணுக்குள் ஊடுருவிச்சென்று பின்னர் வெடிக்கும். இதனால் மண்ணுக்குள் அடியில் இருக்கும் இலக்குகளை சேதப்படுத்த முடியும்.

அதன்படி இந்த குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தி உள்ளது. இந்த வகை குண்டுகளை அமெரிக்கா முதன் முதலில் தற்போதுதான் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த குண்டுவீச்சில் ஈரானின் மேற்படி அணுசக்தி தளங்கள் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன.

இந்த குண்டுகளை தவிர அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து சுமார் 30 டோமோஹாக் ஏவுகணைகளையும் ஈரான் மீது வீசி தாக்கியதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த தாக்குதலால் போர்டோ அணுசக்தி தளத்தில் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் இந்த தாக்குதல்களால் கதிரியக்க ஆபத்து மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு எதுவும் இதுவரை இல்லை எனவும், எனினும் அந்த தளங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை கூறியுள்ளது.

தங்கள் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தியதை ஈரானும் உறுதி செய்துள்ளது. எதிரிகளின் இந்த அச்சுறுத்தலை பார்த்து அணு திட்டங்களை ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என அந்த நாட்டு அணுசக்தி அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருந்தது.

இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர், 'அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகுக்கு இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம். போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் கண்டிப்பாக ஒப்புக்கொள்ள வேண்டும். நன்றி' என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஈரானுக்கு எதிராக ஆபத்தான போரை அமெரிக்கா தொடங்கி இருப்பதாக அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும்போதே இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் சட்ட விரோத அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா துரோக ராஜதந்திரத்தை கடைப்பிடித்து இருப்பதை உலகம் மறந்து விடக்கூடாது.

அமெரிக்க ராணுவ அத்துமீறல் மற்றும் இந்த முரட்டு ஆட்சியால் செய்யப்பட்ட குற்றங்களுக்கு எதிராக முழு பலத்துடன் எதிர்க்கவும், ஈரானின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு உரிமை உண்டு" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல், தனது வான் பகுதியை மூடியது. எனினும் அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பயங்கர தாக்குதலை நடத்தியது. 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி செலுத்தியதாக ஈரானின் புரட்சிகர படை தெரிவித்தது.

இதில் குழந்தைகள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. டெல் அவிவ் நகரில் பலமாடி கட்டிடம் ஒன்றும், ஏராளமான வீடுகளும் சேதமடைந்துள்ளன. மறுபுறம் ஈரான் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் 2 எப்-5 ரக விமானங்களை அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

மேலும் இஸ்பகான் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் உள்பட பல இடங்களிலும் தாக்குதல் நடத்தியது.

இரு நாடுகளுக்கு இடையே 10 நாட்களாக நடந்து வரும் தாக்குதலால் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. அந்தவகையில் ஈரானில் 865 பேர் பலியாகி உள்ளதாகவும், 3,396 பேர் காயமடைந்து இருப்பதாகவும் வாஷிங்டனை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஈரான் மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. அதேநேரம் சுமார் 400 பேர் உயிரிழந்ததுடன், 3,056 பேர் காயமடைந்திருப்பதாக ஈரான் சுகாதார அமைச்சகம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. எனினும் 24 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் கடைசியாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவித்தன. 

இந்நிலையில் மத்திய கிழக்கு மோதல் தொடர்பாக அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை 'உலகளாவிய எச்சரிக்கை' விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலால் மத்திய கிழக்கு முழுவதும் பயணங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது வான்வெளி மூடப்பட்டு வருகிறது. அமெரிக்க குடிமக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க மக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உலகெங்கிலும் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்துகிறது. பயணத்தைத் திட்டமிடும்போது எங்கள் பயண ஆலோசனை, நாட்டுத் தகவல் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு எச்சரிக்கைகளை கவனமாகப் படிக்கவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் தாக்குதல் தொடங்கியிருப்பதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Read Entire Article