
கேப்டவுன்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த தொடரில் லீக் சுற்று நேற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.
டெல்லி கேப்பிட்டல்ஸ்,சன்ரைசர்ஸ் ஐதராபாத் ,லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 5 முதல் 10 இடங்களை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.
இதில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. அடுத்து இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் மும்பை - பஞ்சாப் அணிகள் அகமதாபாத்தில் இன்று மோதுகின்றன.
இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடன் மோதப்போகும் அணி எது? என்பது குறித்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.
அவரது கணிப்பின் படி, பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டியில் பெங்களூருவுடன் மோதும் என்று கூறியுள்ளார்.