
லக்னோ,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். சீசன் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
இதில் புதிய கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் நாளை (24-ம் தேதி) மோத உள்ளது.
இதனிடயே லக்னோ அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான மோசின் கான் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகினார்.
இந்நிலையில் மோசின் கானுக்கு மாற்று வீரராக இந்திய முன்னணி வீரரான ஷர்துல் தாகூர் லக்னோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே லக்னோ அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷர்துல் தாகூரை கடந்த மெகா ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்திருந்தார். தற்போது லக்னோ நிர்வாகம் அவருக்கு ஐ.பி.எல். தொடரில் விளையாடும் வாய்ப்பினை வழங்கியுள்ளது.