
மும்பை,
10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது.
18-வது சீசன் முடிவடைந்த 2 நாட்களுக்குள் அடுத்த சீசனுக்கான சலசலப்புகள் தற்போதே தொடங்கிவிட்டன. அடுத்த சீசனுக்கு முன்னதாக பல அணிகள் தங்கள் பணியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களில் மாற்றங்களைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.
ஏனெனில் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு (ரூ.27 கோடி) ஏலத்தில் வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 7-வது இடம் பிடித்து வெளியேறியது. இதனால் அந்த அணியில் பல மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தோல்வியின் எதிரொலியாக லக்னோ அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து இந்திய முன்னாள் வீரரான ஜாகீர் கான் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது செயல்பாடுகள் மீது லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீப் கோயங்கா அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜாகீர் கான் இந்த ஆண்டுதான் லக்னோ அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.