துபாய்: ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து அதற்கு பழிவாங்கும் விதமாக செங்கடலில் செல்லும் படகுகள் மீது ஏமனில் உள்ள ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு பதிலடியாக ஏமனில் உள்ள ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர் வணிக கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ஹவுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதன் பின்னர் கடந்த மாதம் 15ம் தேதி முதல் ஏமனில் 200 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்தது. இந்த தாக்குதலில் 69 பேர் பலியானதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஏமனில் ஒரு இடத்தில் கிட்டத்தட்ட 70 பேர் வரை குழுமியிருக்கும் கூட்டத்தினர் மீது டிரோன் தாக்குதல் நடத்திய வீடியோவை அதிபர் டிரம்ப் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் டிரோன் தாக்குதலில் அந்த பகுதியில் கரும்புகை எழுகிறது. தாக்குதல் நடந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஹவுதி படையினர் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் மற்றும் இதர விவரங்களை அவர் வெளியிடவில்லை.
The post ஏமனில் அமெரிக்கா வான் வழி தாக்குதல்: 2 பேர் பலி: 9 பேர் காயம் appeared first on Dinakaran.