மனைவியின் தகாத உறவால் கணவன் ஆத்திரம்; மாமியார், கள்ளக்காதலனின் தாய், தந்தை படுகொலை: வாலாஜா அருகே பயங்கரம்

5 hours ago 3

ராணிப்பேட்டை: வாலாஜா அருகே மனைவியின் கள்ளக்காதலால் ஆத்திரமடைந்து, மாமியார், கள்ளக்காதலனின் தாய், தந்தை ஆகிய 3 பேரை கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டை பழைய ரேசன் கடை தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவரது மனைவி பாரதி (45). இவர்களுக்கு புவனேஸ்வரி (23) மற்றும் ராஜேஸ்வரி (21) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பாரதி கூலிவேலை செய்து இரண்டு மகள்களையும் வளர்த்து வந்தார். ‌கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகள் புவனேஸ்வரியை, சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சி புதுக்குடியனூரை சேர்ந்த பாலு (30) என்ற விவசாய கூலித்தொழிலாளிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அவர்களுக்கு சாஸ்மிதா(4) என்ற பெண் குழந்தை உள்ளது. அதேபோல் இளைய மகள் ராஜேஸ்வரியை மற்றொருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புவனேஸ்வரிக்கும் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொடைக்கல்லை சேர்ந்த பாலுவின் சித்தப்பா மகன் விஜய்க்கும் (26) கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ேமலும் பாலுவும் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, புவனேஸ்வரி கணவனை பிரிந்து கீழ்புதுப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். புவனேஸ்வரி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பாலு அதிகளவில் மது குடித்து விட்டு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு மனைவி, மாமியாருடன் தகராறு செய்துள்ளார். இதில் பயந்துபோன புவனேஸ்வரி வெளியே சென்றுள்ளார். ஆத்திரத்தில் இருந்த பாலு கத்தியால் மாமியார் பாரதியின் தலை மற்றும் கழுத்தின் பின்பக்கம் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்ட பாலு, கொடைக்கல் கிராமத்தில் உள்ள விஜய்யின் வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் வீட்டில் இல்லாததால் அவரது தந்தை அண்ணாமலை(52), தாய் ராஜேஸ்வரி(45) ஆகியோரை இரும்பு ராடால் சரமாரியாக அடித்துக்கொலை செய்துள்ளார். பின்னர், வாலாஜா காவல் நிலையம் சென்று சரண் அடைந்தார். இதை தொடர்ந்து போலீசார் 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாலாஜா மற்றும் கொண்டபாளையம் போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து வாலாஜா போலீசார் பாலுவை கைது செய்தனர்.

The post மனைவியின் தகாத உறவால் கணவன் ஆத்திரம்; மாமியார், கள்ளக்காதலனின் தாய், தந்தை படுகொலை: வாலாஜா அருகே பயங்கரம் appeared first on Dinakaran.

Read Entire Article