புதுடெல்லி: ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் இந்திய இளைஞர்கள் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் மோடி வானொலி நிகழ்ச்சியில் பேசினார்.
பிரதமர் மோடி இன்று வானொலி மூலம் பேசும் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் 119வது மாதத்தின் நிகழ்வின் வாயிலாக பொதுமக்களிடையே பேசுகையில், ‘சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் நடந்து வருகிறது. விண்வெளி துறையில் இந்தியா அற்புதங்களை செய்து வருகிறது. கடந்த மாதம் இஸ்ரோ 100வது ராக்கெட்டை விண்ணில் ஏவியது. 400க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இவையாவும் விண்வெளி துறையில் புதிய உயரங்களை அடைவதற்கான வலிமையை காட்டுகிறது. நமது விண்வெளி விஞ்ஞானிகள் குழுவில், பெண் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
அனைத்து துறையிலும் பெண்கள் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். விண்வெளித் துறையில் பணியில் சேருவதற்கு நமது இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் மார்ச் 8ம் தேதி ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்பட உள்ளதால், அந்த நாள் பெண் சக்தியை போற்றுவதற்கு சிறப்பான சந்தர்ப்பமாகும். மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதள பக்க கணக்குகளை பெண்களிடம் ஒப்படைக்க போகிறேன். அன்றைய தினம் பெண்கள் பதிவுகளை பகிரலாம். விண்வெளி மற்றும் அறிவியலைப் போலவே, ஏஐ தொழில்நுட்பத்திலும் இந்தியா வலுவான அடையாளத்தை பெறும்.
இளைஞர்களிடையே கவலையை அதிகரிக்கும் விவகாரமாக உடல் பருமன் உள்ளது. தேசிய அறிவியல் தினத்தன்று இளைஞர்கள் அறிவியல் தொடர்பான மையங்களை பார்வையிட வேண்டும். ஒரு நாளாவது விஞ்ஞானியாக இருக்க வேண்டும். விண்வெளிய ஆராய்ச்சி ஆய்வகம், கோளரங்கம் அல்லது விண்வெளி மையம் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும். அறிவியல் மீதான உங்கள் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, தெலங்கானாவின் அடிலாபாத் அரசுப் பள்ளி ஆசிரியர் தோடசம் கைலாஷ் என்பவர், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழங்குடியின மொழிகளில் பாடல்களை இயற்றி வருகிறார். கோலாமி மட்டுமின்றி பல மொழிகளில் பாடல்களை உருவாக்கி வருகிறார்.
விண்வெளித் துறையாக இருந்தாலும் சரி, செயற்கை நுண்ணறிவு துறையாக இருந்தாலும் சரி, நமது இளைஞர்களின் பங்கேற்பு புதிய புரட்சியை ஏற்படுத்துகிறது’ என்று கூறினார்.
The post ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் இந்திய இளைஞர்கள் புதிய புரட்சி: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.