செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ‘எஸ்ஏ20’ டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று வெளியேறும் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டம் நடக்கிறது. நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்-ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று களம் காணுகின்றன. நடப்புத் தொடரின் லீக் சுற்று முடிவில் 3, 4வது இடங்களை பிடித்த இந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2வது தகுதிச்சுற்றுக்கு ( குவாலிபயர்) முன்னேறும். நடப்புத் தொடரில் இந்த 2 அணிகளும் மோதிய 2 ஆட்டங்களிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை வசப்படுத்தி உள்ளன. இதுவரை இந்த அணிகள் மொத்தத்தில் 7 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
அவற்றில் ஒரு ஆட்டம் கைவிடப்பட எஞ்சிய 6 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 3 ஆட்டங்களில் வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளன. சன்ரைசர்ஸ் தொடர்ந்து 3வது முறையாகவும், சூப்பர் கிங்ஸ் 2வது முறையாகவும் பிளே ஆப் சுற்றில் களமிறங்கி உள்ளன. சன்ரைசர்ஸ் இதற்கு முன் விளையாடிய 2 பிளே ஆப் சுற்றுகளில் வென்று பைனலுக்கு முன்னேறி உள்ளது. 2 முறை கோப்பையை கைப்பற்றியது. சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே ஒரு முறை பிளே ஆப்பில் களம் கண்டது. அதில் சன்ரைசர்ஸ் அணியிடம் சரண்டரானது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் பதிலடி தரும் முனைப்பிலும், சன்ரைசர்ஸ் வெற்றி வரலாறை தொடரும் வேகத்திலும் களம் காண இருக்கின்றன.
The post எஸ்ஏ20யில் வெல்வது யார்… வெளியே செல்வது யார்? சன்ரைசர்ஸ்-சூப்பர் கிங்ஸ் மோதல் appeared first on Dinakaran.