என்எல்சி நிர்வாகமும் ஒப்பந்த தொழிலாளர்களும் பேச்சுவார்த்தை குழுவை அணுக வேண்டும்: போராட்டம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

3 months ago 15

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை எதிர்த்து என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தொழிற் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

மேலும், என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஆறு மாதங்களில் உயர் மட்டக்குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, பிரச்சனை தொடர்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தை குழுவை அணுக உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை போரட்டத்தில் ஈடுபட தொழிலாளர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி , ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post என்எல்சி நிர்வாகமும் ஒப்பந்த தொழிலாளர்களும் பேச்சுவார்த்தை குழுவை அணுக வேண்டும்: போராட்டம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article