
சென்னை,
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் இந்த தாக்குதல் அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில், காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை நெரிவிக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்" என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் ஆண்டனி தனது பதிவை தவறாக புரிந்து கொண்டவர்களின் கவனத்திற்காக புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம். நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.