
சென்னை,
நாமக்கல்லில் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் மற்றும் பொன் காளியம்மன் கோவில்களில் இருந்து, பொன் காளியம்மன் கோவிலை தனியாக பிரிக்க வேண்டும் என்று கணேசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான அந்த மனுவில், பொன் காளியம்மன் கோவில் தங்கள் சாதியை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கிறார்கள் என்றும், மற்ற கோவில்கள் வேறு சாதியினர் நிர்வகிக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாதியை நிலைநிறுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்று கொள்ள முடியாது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, "கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது. அனைத்து பக்தர்களும் கோவிலை நிர்வகிக்கலாம், வழிபடலாம். எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது. கோவிலை சாதி அடிப்படையில் நிர்வகிப்பது என்பது மத நடைமுறையும் அல்ல. பெரும்பாலான பொதுக்கோவில்கள், குறிப்பிட்ட சாதியினரின் கோவில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன.
சாதிப்பாகுபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் மதப்பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். பிரிவினைக்கான மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள்" என்று அவர் கூறினார்.