திருச்சி: பெரியார் குறித்து சர்ச்சை கருத்து கூறிவருவது சீமானுக்கும் அவரது கட்சிக்கும் நல்லதல்ல என்று துரை வைகோ எம்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி நேற்று பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர், அவர் அளித்த பேட்டி: பாஜ ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து விவசாயிகள் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். சமூக நீதி, பெண் உரிமை, எல்லாருக்கும் எல்லாம் என்ற சமஉரிமைகளை தந்தை பெரியார் போராடி பெற்று தந்தார்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு தந்தை பெரியாரே காரணம். இதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் தேசியம் தவறான விஷயம் இல்லை, ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது வேதனையான விஷயம். ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள் பெரியார் கொள்கையை எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை. பெரியாரை கொச்சைப்படுத்துவதில் சீமானுக்கும், அண்ணாமலைக்கும் போட்டி இருக்கிறது, இது மிகவும் வருத்தமான விஷயம்.
பெரியார் பற்றி சீமான் சர்ச்சை கருத்துகளை கூறி வருவது அவருக்கும், அவரது கட்சிக்கும் நல்லதல்ல. தமிழகம் முழுவதும் திராவிட இயக்கங்கள் சீமான் பேசியதை கண்டித்துள்ளன. பெரியார் இல்லை என்றால், அண்ணாமலை ஐபிஎஸ் போன்ற பதவிகளை எட்டியிருக்க முடியாது. பாஜ ஆளும் மாநிலங்களிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post எதிர்ப்பதில் அண்ணாமலையுடன் போட்டி பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு சீமானுக்கும் கட்சிக்கும் நல்லதல்ல: துரை வைகோ எச்சரிக்கை appeared first on Dinakaran.