காலத்திற்கு அப்பால் காட்டும் நாமம்

1 day ago 5

பண்டபுத்ர வதோயுக்த பாலா விக்ரம நந்திதா

நாம் தொடர்ச்சியாக பண்டாசுர யுத்த விஷயங்களைத்தான் பார்த்துக் கொண்டே வருகிறோம்.

இதற்கு முந்தைய நாமத்தில் திதி நித்யா தேவதைகள், வாராஹி, சக்தி சேனைகள் என்று எல்லாவற்றையும். இதற்கு முந்தைய நாமாவான நித்யா பராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா என்கிற நாமத்தில் அம்பாளினுடைய பதினைந்து திதி நித்யா தேவதைகள் எப்படி பண்டாசுரனின் படைத் தலைவர்களை எப்படி சம்ஹாரம் செய்தனர் என்று பார்த்தோம். அஞ்ஞான விருத்தியை எப்படி ஞான விருத்தியானது அழிக்கின்றது என்பதுதான் இங்கு விஷயம்.

இப்போது இந்த நாமத்தைப் பார்க்கும்போது, அதாவது, பண்டபுத்ர வதோயுக்த பாலா விக்ரம நந்திதா… என்கிற இந்த நாமமானது பாலாதிரிபுரசுந்தரியினுடைய விஷயத்தை இந்த நாமம் சொல்கிறது. பாலாதிரிபுரசுந்தரியினுடைய உபாசனையை இந்த நாமம் சொல்கிறது.

இனிமேல், சஹஸ்ரநாமங்களில் நிறைய விஷயங்களில் பாலா திரிபுரசுந்தரியினுடைய நாமம் வரும். ஆனால், முதன் முதலாக இங்குதான் வெளிப்படையாக பாலாவின் பிரபாவம் வெளிப்படுகின்றது. அது இந்த நாமத்தினுடைய முக்கியத்துவமும் ஆகும்.

பண்டாசுர யுத்தத்தில் போர் தலைவர்கள் வந்ததைப் பார்த்தோம். லலிதா உபாக்கியானம் அல்லது லலிதோபாக்கியானத்தின்படி பண்டாசுரனுடைய முப்பது புத்திரர்கள் போருக்கு வருகிறார்கள்.

பண்டாசுரன் முதலின் படைத் தலைவர்களை அனுப்பி வைத்தான். படைத் தலைவர்களை திதி நித்யா தேவதைகள் சம்ஹாரம் செய்து விட்டார்கள். இப்போது முப்பது புத்திரர்களை அனுப்பி வைக்கிறான். முப்பது புத்திரர்களும் வரும்போது, அம்பாளினுடைய பாலா சொரூபமாக இருக்கக் கூடிய, அம்பாளினுடைய புத்திரியாக இருக்கக்கூடிய, அம்பாளினுடைய குமாரியாக இருக்கக் கூடிய, அம்பாளினுடைய மகளாக இருக்கக் கூடியவளே இந்த பாலா திரிபுரசுந்தரி.

லலிதா திரிபுரசுந்தரி என்பவள் அம்பாளின் மாத்ரு ரூபத்தில் இருந்தாள். அம்மா ரூபத்தில் இருந்தாள் லலிதா திரிபுரசுந்தரி. மகள் ரூபத்தில் இருந்தாள் பாலா திரிபுரசுந்தரி. இன்னும் இதை எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரே அம்பாள்தான். அம்மா ரூபத்தில் இருக்கும்போது லலிதா திரிபுரசுந்தரி. அதே அம்பாள் மகள் ரூபத்தில் இருக்கும்போது பாலா திரிபுரசுந்தரி.

இந்த மகள் ரூபத்தில் இருக்கும் பாலா திரிபுரசுந்தரியான அம்பாள் வந்து இந்த முப்பது பண்ட புத்திரர்களை சம்ஹாரம் செய்கிறாள். அப்படி பாலா சம்ஹாரம் செய்ததைப் பார்த்து அம்பாள் பூரித்துப் போகிறாள். தன்னுடைய மகளானவள் பண்ட புத்திரர்களை சம்ஹாரம் செய்ததைப் பார்த்து தாயாக இருக்கக் கூடிய லலிதாம்பிகை சந்தோஷப்படுகிறாள்.

இந்த நாமாவானது நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கின்றது.

ஸ்ரீவித்யா உபாசனையை தொடங்கும்போது முதலில் மகாகணபதியில் தொடங்குவது சம்பிரதாயம். ஆனாலும், ஸ்ரீவித்யா என்கிற சம்பிரதாயம் அவனுக்கு இந்த பாலாவை தெரிந்து கொள்ளும்போதுதான் அறிமுகம் ஆகும். அதனாலேயே பாலாவினுடைய உபாசனைக்கு லகு ஸ்ரீவித்யா என்று பெயர்.

அதற்கு ஏன் லகு ஸ்ரீ வித்யா என்று பெயர்?

இப்போது அம்பாளினுடைய பஞ்சதசாக்ஷரி மந்திரம் இருக்கிறது. அதற்கு ஸ்ரீவித்யா என்று பெயர். அந்த பஞ்சதசாக்ஷரி மந்திரத்தில் மூன்று கூடங்கள் இருக்கும். வாக் பவ கூடம், மத்யம கூடம், சக்தி கூடம் அல்லது வாக் பவ கூடம், காமராஜ கூடம், சக்தி கூடம். இதில் மத்யம கூடம் காமராஜ கூடமும் ஒன்றுதான்.

இதற்கு முன்னாலுள்ள கேசாதி பாதாந்த வர்ணனை என்கிற கேசம் முதல் பாதம் வரையிலான வர்ணனையில் இதை பார்த்திருக்கிறோம். இனி பின்னால் வரக்கூடிய நாமங்களில் இந்த கூடங்களை குறித்த விஷயங்களை விரிவாகப் பார்க்கப் போகிறோம். அதாவது, மந்திரங்கள் குறித்த வர்ணனைகளில் வரக்கூடிய பகுதிகளில் அதை விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

இப்போது, மூன்று கூடங்களாக இருக்கக் கூடிய பஞ்சதசாக்ஷரி மந்திரத்தினுடைய ஒவ்வொரு கூடத்திற்கும் ஒரே அட்சரம் மட்டும் வைத்தால், கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள். முதல் கூடத்திற்கு ஒரு அட்சரம். இரண்டாம் கூடத்திற்கு ஒரு அட்சரம். மூன்றாம் கூடத்திற்கு ஒரு அட்சரம் என்று வைத்துக் கொண்டால், அதுதான் பாலாவினுடைய மந்திரம்.

இப்போது பஞ்சதசாக்ஷரி என்பது விரிவானது. அது ஸ்ரீ வித்யா என்று சொன்னால், அந்தப் பதினைந்து எழுத்தான பஞ்சதசாக்ஷரியின் சுருக்கமான இந்த மூன்றெழுத்து இருக்கிறதல்லவா… பாலாவினுடைய மூன்று எழுத்து மந்திரம் இருக்கிறதல்லவா அது லகு ஸ்ரீ வித்யா. அதாவது ஸ்ரீவித்யாவினுடைய தொடக்கப் புள்ளி. அதாவது எந்த அம்பாளை நாம் பிரமாண்ட நாயகியாக பார்க்கப் போகிறோமோ, அந்த அம்பாளை நாம் தொடக்கத்தில் குழந்தையாகப் பார்க்கிறோம். எவள் ஜக ஜனனியோ… எவள் எல்லாவற்றிற்கும் தாயாக இருக்கிறாளோ… அந்த தாயாக இருக்கக் கூடிய அம்பாளை நாம் முதல் படியில் எப்படி பார்க்கிறோமெனில், நம்முடைய குழந்தையாகப் பார்க்கிறோம். அதுதான் இங்கு பாலாவினுடைய உபாசனா விஷயம்.

இந்த பண்ட புத்திரர்கள் முப்பது பேர்கள் வருகிறார்கள் அல்லவா… இவர்கள் நமக்கு எதைக் காண்பித்துக் கொடுக்கிறார்கள் என்பதை சற்றே விரிவாக சென்று புரிந்து கொள்வோம் வாருங்கள். ஏனெனில், நாமாவும் சூட்சுமமானது. அதில் பொதிந்துள்ள விஷயமும் விரிவானது. சூட்சுமமானது.

நம்மிடம் தச இந்திரியங்கள் உள்ளன. அதாவது பத்து இந்திரியங்கள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் ஐந்து. இதற்கு முன்பு, இந்த இந்திரியங்கள், மனசு, புத்தி, அந்தக்கரணம் என்று எல்லாமே அம்பாள் கொடுக்கக் கூடிய கருவிகள். இவையெல்லாமுமே அம்பாளால் அளிக்கப்பட்ட பிரசாதம் என்று பார்த்தோம்.

ஆனால், அந்தக் கருவியை சரியான விதத்தில் பயன்படுத்தினால்தான் நாம் அடைய வேண்டிய மேலான நிலையை அடைய முடியும். ஆனால், அநாதி கர்ம வாசனையானது அம்பாள் கொடுத்த கருவிகளை சரியாகப் பயன்படுத்த விடாமல், இந்த இந்திரியங்களை எல்லாம் பகிர்முகமாக (வெளி உலகத்தை நோக்கி) நம்முடைய அஞ்ஞான விருத்தி திரும்புகின்றது. இந்த அஞ்ஞான விருத்தியினால் நம்முடைய இந்திரியங்களெல்லாம் பகிர்முகம் என்கிற புற உலகை நோக்கித் திரும்புகின்றது. இப்படி திரும்பும்போது கர்மவாசனை நடக்கின்றது என்று பார்த்தோம்.

இப்போது பாருங்கள். கர்ம வாசனைகளினால், அஞ்ஞான விருத்தியாகின்றது. அஞ்ஞான விருத்தியினால் கர்ம வாசனை வருது. இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்த ஒரு குழப்பமான செயலாக உருவெடுக்கின்றது.
இப்போது இந்த கர்ம வாசனை என்பது எப்படி நம்மிடம் செயல்படும்?

கர்ம வாசனையானது நம்மிடத்தில் மூன்று விதங்களாக செயல்படுகின்றன.

நம்முடைய சாஸ்திரம் த்ரி தாபம் என்று சொல்கின்றன. அதாவது மூன்று விதமான தாபங்கள் என்று சொல்கின்றன. அல்லது த்ரிதோஷம் (மூன்று தோஷங்கள்) என்று சொல்வார்கள். அதாவது, ஒன்று ஆத்யாத்மிகம். இன்னொன்று ஆதி பௌதீகம். மூன்றாவது ஆதி தைவிகம். இந்த மூன்றின் வழியாகத்தான் நம்முடைய கர்மாவானது செயல்பட முடியும்.

(சுழலும்)

The post காலத்திற்கு அப்பால் காட்டும் நாமம் appeared first on Dinakaran.

Read Entire Article