எச்சரிக்கை சைரன் தொடர்ந்து ஒலிப்பதால் பதற்றம்.. ரெட் அலர்ட்டில் அமிர்தசரஸ்

5 hours ago 2

அமிர்தசரஸ்,

இந்தியாவை நோக்கி நேற்று 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன்களை இந்திய ராணுவம் நடுவானில் அழித்து வந்தது. முக்கியமான வான்பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தியது.

இந்தநிலையில் நள்ளிரவில் இந்தியாவும் திருப்பி அடிக்கத்தொடங்கியது. பாகிஸ்தான் நாட்டின் உணவு மற்றும் வேளாண் உற்பத்தியில் முக்கியமாக திகழும் கரியான் மற்றும் ஜலால்பூர் ஜெட்டா நகரில் இந்திய டிரோன்கள் தாக்குதலை தொடங்கின. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இந்தியா டிரோன் தாக்குதலை நடத்தியது.

மேலும் பீரங்கி தாக்குதலையும் அதிகரித்தது. அதேநேரம் பாகிஸ்தான், காஷ்மீரின் ஸ்ரீநகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்த டிரோனை இந்தியா அழித்தது.

இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வான்வழி தாக்குதலில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மாநிலங்கள் இருளில் மூழ்கின. மேலும் இந்த மாநிலங்களில் தொடர்ந்து அபாய ஒலி எழுப்பப்பட்டதால், பல இடங்களில் சைரன் ஒலிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருந்தனர்.

தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் சத்தம் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

இந்த சூழலில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக இந்திய ராணுவம் தனது எக்ஸ் வலைதளத்தில், "நமது மேற்கு எல்லைகளில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மற்றும் பிற வெடிமருந்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற ஒரு சம்பவத்தில், இன்று அதிகாலை 5 மணியளவில், அமிர்தசரசின் காசா கான்ட் மீது பல எதிரி ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் பறந்து செல்வது காணப்பட்டது.

சட்ட விரோதமான ஆளில்லா விமானங்கள் உடனடியாக நமது வான் பாதுகாப்புப் பிரிவுகளால் ஈடுபடுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. இந்தியாவின் இறையாண்மையை மீறுவதற்கும், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் அப்பட்டமான முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய ராணுவம் எதிரிகளின் திட்டங்களை முறியடிக்கும்" என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 15 டிரோன்கள் காணப்பட்டதை அடுத்து, அமிர்தசரசில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், ஜன்னல் அருகே நிற்க வேண்டாம் என்று அமிர்தசரஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர், பதிண்டாவில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துகொண்டே இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read Entire Article