
சென்னை,
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் சமீபத்தில் வெளியானது. கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக்லைப் படம் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து உருவாகி வருகிறது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படமும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளது.
இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.