![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38072812-siswaran.webp)
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் போக்குவரத்து துறை மற்றும் வர்த்தக தொடர்பு துறை மந்திரியாக பதவி வகித்தவர் எஸ்.ஈஸ்வரன். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டதால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியை ராஜினாமா செய்தார். வழக்கு விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், சிறையில் நன்னடத்தையை கருத்தில் கொண்டு ஈஸ்வரனை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வீட்டு காவல் திட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் போலவே, எஸ்.ஈஸ்வரனும் தனது மீதமுள்ள தண்டனைக் காலத்தை குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் தனது வீட்டிலேயே அனுபவிப்பார் என்றும், அவரது நடவடிக்கை மின்னணு கண்காணிப்பு டேக் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் சிறைத்துறை வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி சேனல் நியூஸ் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டுக் காவலில் இருந்தாலும் சிறைத்துறை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வெளியில் செல்லலாம். இது தொடர்பாக சிறைத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
சிறைச்சாலை சட்டத்தின்படி, வீட்டுக் காவலின் போது வேலைக்கு செல்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட கைதிகள் தங்கள் வேலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறலாம். வேலைக்கு செல்லாத கைதிகள் பொதுவாக மதிய நேரங்களில் வீட்டை விட்டு சில மணிநேரங்கள் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுகிறார்கள்.