காஞ்சிபுரம், ஜன. 12: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் உழவர் சந்தையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், படப்பை, குன்றத்தூர் மற்றும் சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. குன்றத்தூர் உழவர் சந்தை 16.2.2011ம் ஆண்டு 23 கடைகளுடன் துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு சற்று மந்த நிலையிலிருந்து சந்தை இப்பொழுது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த உழவர் சந்தையில் கீரைகள், காய்கறிகள், பழங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், அழகு தாவர செடிகள், மண்பாண்டங்கள் என அனைத்து வகையான பொருட்களும் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.சந்தையில் கடை வைத்திருப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் ஜீவராணி தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் ஆர்.செண்பகவள்ளி, காஞ்சிபுரம் உழவர் சந்தை அலுவலர் மார்ட்டின், படப்பை உழவர் சந்தை அலுவலர் பரணி மற்றும் நுகர்வோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை குன்றத்தூர் உழவர் சந்தை அலுவலர் வீ.சேகர் செய்திருந்தார். விழா முடிவில் அனைவருக்கும் சமத்துவ பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.
The post உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் appeared first on Dinakaran.