பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று சென்னையில் நடந்த பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி தலைவர் அன்புமணி உறுதிபட தெரிவித்தார்.
பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையிலான மோதல் நேற்று முன்தினம் உச்சகட்டத்தை எட்டியது. ‘அன்புமணிக்கு பக்குவம் சபை நாகரிகம், தலைமை பண்பு கிடையாது. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த மிகப்பெரிய தவறு’ என்று ராமதாஸ் கடுமையாக குற்றம்சாட்டினார். தேவைப்பட்டால், பொதுக்குழுவை கூட்டி கட்சியில் இருந்து அன்புமணியை நீக்கவும் முடியும் என்றும் தெரிவித்தார்.