
புதுடெல்லி,
உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவெடுக்க செய்தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உலக நாடுகளின் வரவேற்பு அதிகரித்து வருவதாக அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், ரெயில்வே துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
சூரிச் நகரில் அந்நாட்டு ரெயில்வேயின் (SBB) விளக்கக்காட்சியுடன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டன. இந்திய ரெயில்வே துறையின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்து அந்நாட்டு நிபுணர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இதைத் தொடர்ந்து ரோம்பெர்க் செர்சா ஏஜி, செலக்ட்ரான், யுசென்ட்ரிக்ஸ், ஆடெக் மற்றும் நு கிளாஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். அதிநவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு, நீடித்த உற்பத்திக்கான நடைமுறைகள் போன்ற அம்சங்களில் உள்ள சாத்திய கூறுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
உலக பொருளாதார மன்றத்தின் அறங்காவலர் குழு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் உலகளாவிய சிறந்த நடைமுறைகள், நவீன தொழில்நுட்பங்கள், புதுமை கண்டுபிடிப்புகள் குறித்து பல்வேறு நாடுகள் தங்களது கருத்துகளை தெரிவித்தன. டிஜிட்டல் தொழில்நுட்பம் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான முன் முயற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நடவடிக்கைகள் இந்தியாவின் செயல்பாடுகள் முன்னேற்றம் கண்டு வருவதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அறிவார்ந்த யுகத்திற்கான ஒத்துழைப்பு என்ற கருபொருளில் நடைபெற்ற கருத்தரங்களில் உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து இந்தியாவின் விருப்பத்தை அமைச்சர் வெளிப்படுத்தினார். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலக பொருளாதார மன்றத்துடன் 5 முக்கிய அம்சங்களில் இணைந்து செயல்படுவதற்கு இந்தியா தயாராக உள்ளது என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு இந்திய மாநிலங்களின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.