உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தியா... இன்று உலக பால் தினம்!

1 day ago 5

முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றான பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி 'உலக பால் தினம்' கொண்டாடப்படுகிறது. பாலின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு உணர்த்துவதற்காக கடந்த 2001ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உலகளாவிய உணவாக பாலை அங்கீகரித்து. அதைத் தொடர்ந்து ஐ.நா. உலக பால் தினத்தை அறிவித்தது. அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் 'உலக பால் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இன்று உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது. இது வெறும் கொண்டாட்டத்தற்கான நாளாக மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான மக்களுக்கு ஊட்டமளிக்கும் பாலின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு இயக்கமாகும்.

எலும்பு ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பால் வழங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாலின் சக்தி முக்கியமானது. உலக பால் தினமானது, நிலையான விவசாயம், பொருளாதார மேம்பாடு மற்றும் உலகளாவிய ஆரோக்கியத்தில் பால் வளத் துறையின் பங்களிப்பை அங்கீகரித்து உலக நாடுகளையும் மற்றும் சமூகங்களையும் ஒன்றிணைக்கிறது.

பால் மற்றும் பால் பொருட்களின் சக்தியை கொண்டாடுவோம் என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு பால் தினம் கொண்டாடப்படுகிறது. பால் பொருட்கள் நமது உணவில் வெறும் ஒரு பகுதி மட்டுமல்ல என்பதை இந்த கருப்பொருள் உணர்த்துகிறது. ஆரோக்கிய நன்மைகள் மட்டுமல்லாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த பால் பொருட்கள் உதவுகின்றன. பொருளாதாரத்திலும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.

உலக பால் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில், பால் உற்பத்தியில் இன்று இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளதை பெருமையுடன் நினைவில் கொள்வோம்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது பால் பற்றாக்குறை கடுமையாக இருந்தது. ஆண்டுக்கு 21 மில்லியன் டன்னுக்கும் குறைவாகவே பால் உற்பத்தி செய்யப்பட்டது. 1950-51ம் ஆண்டில் தனிநபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 124 கிராம் என்ற அளவிற்கே பால் கிடைத்தது.

புதிய மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி பால் உற்பத்தியைப் பெருக்குவதற்காக 1965ல் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டபின் பால் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. நாடு முழுவதும் கிராமப்புறங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, பால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. நகரங்கள் மற்றும் பெருநகரங்களுக்கு பால் அதிக அளவு சப்ளை செய்யப்பட்டது. இப்படித்தான், பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றதுடன், பால் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.

1998 முதல் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இப்போது உலகின் பால் உற்பத்தியில் 25 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது.

இதுதொடர்பாக இந்திய பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) வெளியிட்டுள்ள செய்தியில், "உலகளாவிய பால் உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் 2 சதவீதம் அதிகரித்து வரும் அதே வேளையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் தனிநபருக்கு பால் கிடைப்பது 48 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டில், சராசரி இந்தியர் தினமும் 471 கிராமுக்கு மேல் பால் பெறுகிறார். இது உலக சராசரியான 322 கிராமை விட மிக அதிகம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article