உண்மைகளை திரிப்பதை நிறுத்துங்கள் - கனிமொழி எம்.பி.

7 hours ago 2

சென்னை,

தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தியை திணிக்க மத்திய பா.ஜனதா அரசு முயற்சித்து வருவதாக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மும்மொழி கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்து வருவதால், கல்வித்துறைக்கு ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் கேள்வி நேரத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பான கேள்விக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார்.

அப்போது தமிழக எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என அவர் குறிப்பிட்டதால் சர்ச்சை எழுந்தது. உடனே அவர் திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறினார். இருப்பினும் இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பிரச்சினையை கிளப்பியுள்ளது. தர்மேந்திர பிரதானின் சர்ச்சைப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநிலங்களவையில், தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டார். மேலும் தர்மேந்திர பிரதான், மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதாக கூறி தமிழக அரசின் கடிதத்தையும் அவையில் வாசித்தார். இந்த கடிதத்தை அவர் தனது 'எக்ஸ்' தளத்திலும் பதிவேற்றி உள்ளார்.

இந்த கடிதத்துக்கு பதில் அளித்து திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

மும்மொழிக் கொள்கை அல்லது தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்பதாக நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை. பிஎம் ஸ்ரீ பள்ளிகளை மாநில அரசு தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படியே தமிழ்நாடு ஏற்கும் என்றும் மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் அல்ல என்றும் தெளிவாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ, அதை ஏற்றுக்கொள்வோம். உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article