காந்தி நகர்,
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் வரஷா என்ற பகுதியில் நேற்று ராகுல் பிரமோத், அஞ்சலி குமாரி ஆகியோருக்கு திருமணம் நடைபெறவிருந்தது. வரஷா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருமண நிகழ்ச்சியில் மணமகன் வீடு தரப்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணமகள் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவதற்குமுன் உணவு காலியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணமகள் குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் திருமணத்தை மணமகள் குடும்பத்தினர் நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த மணமகன் ராகுல் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். உடனடியாக மணமகளின் குடும்பத்தினரை அழைத்து போலீசார் விசாரித்தனர். பின்னர், இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. பின்னர், போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையிலேயே ராகுல் பிரமோத்துக்கும், அஞ்சலி குமாரிக்கும் திருமணம் நடைபெற்றது.