
கீவ்,
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார். இது தொடர்பாக துருக்கியில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போர்க்கைதிகளை பரிமாறிக் கொண்டார்களே தவிர, சண்டை நிறுத்தம் செய்யவில்லை. மாறாக போர் தீவிரம் அடைந்தது. இரு நாடுகளும் மாறி மாறி சரமாரியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் ரஷியா அதிகப்படியான டிரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் நேற்று அறிவித்து உள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை ரஷியா முடுக்கிவிட்டிருக்கிறது. முக்கியமாக கீவ் நகரில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாமல் தாக்குதல் நடந்தது. வானில் ஏவுகணை, டிரோன் குண்டுவெடிப்புகள் ஒளிர்ந்தபடி இருந்தன.
இரவு முழுவதும் 550 டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக உக்ரைன் கூறி உள்ளது. இதில் 23 பேர் காயம் அடைந்ததாக அறிவித்து உள்ளனர்.
இதுபற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "சைரன்கள் அலறிக்கொண்டே இருந்ததால் இது ஒரு கடினமான இரவாக அமைந்தது. ரஷிய அதிபர் புதின், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பேசிக்கொண்டிருந்த அதே சமயத்தில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு உள்ளது. எனவே போரை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணம் ரஷியாவுக்கு இல்லை என்பது தெளிவாகி உள்ளது" என்றார்.