
புலந்த்சாகர்,
உத்தர பிரதேசத்தின் சிகந்திராபாத் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பம்ப் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தவர் ராஜு சர்மா (வயது 30). இந்நிலையில், நேற்று மாலை பைக்கில் வந்த 2 பேர், ஊழியரிடம் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் தரும்படி கேட்டுள்ளார்.
ஆனால், அவர் தர மறுத்து விட்டார். இதனால், மேலாளரான ராஜுவை அவர்கள் அணுகி பாட்டிலில் பெட்ரோல் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அவரும் மறுப்பு தெரிவித்து விட்டார் என கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தகராறு முற்றி, 2 பேரும் துப்பாக்கியை எடுத்து ராஜுவை நோக்கி சுட்டு விட்டு தப்பினர்.
இதனை தொடர்ந்து, ராஜுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி மூத்த போலீஸ் சூப்பிரெண்டு சுலோக் குமார் கூறும்போது, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களை தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.