
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி அனுல் ஹசன். கடந்த பிப்ரவரி மாதம் அம்மாநிலத்தின் ராணிகஞ்ச் கிராமத்தில் இரு தரப்பிற்கு இடையேயான மோதலில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. ரவுடி அனுல் ஹசன் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிலர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து ரவுடி அனுல் ஹசன் தலைமறைவானார்.
அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். மேலும், அனுல் ஹசன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டது. போலீசார் தன்னை கைது செய்வதை தவிர்க்க அனுல் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், சுல்தான்பூர் பகுதியில் ரவுடி அனுல் ஹசன் பதுங்கி இருப்பதாக உ.பி. போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பயஹிபூர் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி அனுல் ஹசனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடி அனுல் ஹசனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.