
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் டேன்டீ ரேஞ்ச் எண்.1 தேயிலை தோட்ட ஆஸ்பத்திரிக்கு கீழ் ஏலமன்னா பகுதி உள்ளது. இப்பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு குட்டிகளுடன் 8 காட்டு யானைகள் புகுந்தன. அங்கு ராமநாதன் என்பவரது வீட்டு திண்ணையின் தூண்களை உடைத்து சேதப்படுத்தின. அதோடு வீட்டை இடித்தன. இதனால் ராமநாதன், அவரது குடும்பத்தினர் அச்சத்தில் வீட்டின் ஒரு பகுதியில் இருந்தனர்.
இதை அறிந்த பிதிர்காடு வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர். மேலும் வனச்சரகர் ரவி, வனத்துறையினர் பார்வையிட்டனர். அப்போது நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதேபோல் அய்யன்கொல்லி அருகே தட்டாம்பாறை, கோட்டப்பாடி, பாதிமூலா, குழிக்கடவு, சன்னக்கொல்லி, செம்பக்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.