அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

1 day ago 7

திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 6-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி இன்று காலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடைபெற்றது. காலை சுப்ரபாதத்துடன் சுவாமி எழுந்தருளச் செய்யப்பட்டு, தோமால சேவை மற்றும் அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் காலை 8 முதல் 10.30 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில், கோவில் வளாகம், சுவர்கள், கூரை மற்றும் அனைத்து வழிபாட்டு பொருட்களையும் தண்ணீரால் சுத்தம் செய்தபிறகு நாமகோபு, ஸ்ரீ சூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிகட்டா மற்றும் பிற வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பிரம்மோற்சவத்தின் தொடக்கமாக 6-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 10-ந்தேதி மாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணி வரை கல்யாண உற்சவம், 11-ந்தேதி கருட வாகன வீதிஉலா, 14-ந்தேதி தேரோட்டம், 15-ந்தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. ஒரு கல்யாண உற்சவ டிக்கெட்டுக்கு 2 பக்தர்கள் பங்கேற்கலாம்.

பிரம்மோற்சவ விழாவையொட்டி தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் வாகன வீதி உலாக்கள் நடக்கின்றன. வாகன சேவைக்கு முன்னால் நாட்டியம், நடனம், இசை நிகழ்ச்சி, பக்தி பாடல், பஜனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இது தவிர தினமும் இந்து தர்ம பிரசார பரிஷத் திட்டம், அன்னமாச்சாரியார் திட்டம், தாச சாகித்ய திட்டம் ஆகியவை சார்பில் பக்தி கலாசார நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 

Read Entire Article