ஈரோடு இரட்டை கொலை - 4 பேர் கைது

4 hours ago 1

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் தனியாக வசித்து வரும் நிலையில் ராமசாமி, மனைவி பாக்கியத்துடன் விலாங்காட்டு வலசு பகுதியில் வசித்து வருவதுடன் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

இந்த சூழலில், கடந்த 1ம் தேதி மகன் கவிசங்கர் செல்போன் மூலம் அழைத்தும் தந்தை எடுக்காததால் அருகில் உள்ள உறவினர்கள் மூலமாக வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்லி உள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டதும் வீட்டில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சுஜாதா விசாரணை மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மோப்பநாய் பிரிவினர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இது வரை ஞானசேகரன், ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article