
டெல்லி,
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து இன்று 10வது நாளாக மோதல் நடைபெற்று வருகிறது. அதேவேளை, ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக ஈரானில் வசித்து வரும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இந்தியாவை சேர்ந்த பலரும் ஈரானில் தங்கில் கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு ஈடுபட்டு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு கருதி இந்தியாவுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் ஈரானில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் ஏற்கனவே 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஈரானில் கல்வி பயின்று வந்த மாணவ-மாணவியர் ஆவர். தற்போது மேலும், 280 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஈரானின் மெஹன் விமானம் மூலம் டெல்லிக்கு வந்துள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மாணவ - மாணவியர் ஆவர்.