
தெஹ்ரான்,
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதுபற்றி ஈரானின் வெளியுறவு துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சி இன்று வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா உள்ளது. ஆனால், ஐ.நா.வின் விதிகளை மீறி பெரும் தவறை செய்துள்ளது.
சர்வதேச சட்டங்களையும் மற்றும் அணு ஆயுத பரவல் தடை சட்டம் ஆகியவற்றை மீறும் வகையில், ஈரானின் அமைதியான அணு ஆயுத நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இன்று காலை நடந்த சம்பவங்கள், தீராத தொடர் விளைவுகளை கொண்டிருக்கும்.
ஐ.நா.வின் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு நாடும் இந்த ஆபத்து தரும், சட்டவிரோத மற்றும் குற்ற அணுகுமுறையால் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
ஐ.நா. அமைப்பின் ஆவணங்கள் மற்றும் அதன் பிரிவுகளின்படி, சுய பாதுகாப்புக்கு சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் வகையில், ஈரான் தன்னுடைய இறையாண்மை, நலன் மற்றும் மக்களை பாதுகாக்க எல்லாவித வாய்ப்புகளையும் வைத்திருக்கிறது என கூறியுள்ளார்.
இதனால், ஈரான் சொந்த மக்களை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுப்பதுடன், இறையாண்மையை பாதுகாக்கும் உரிமை தங்களிடம் உள்ளது என்ற வகையில் தீவிர பதில் தாக்குதலிலும் ஈடுபட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.